கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை சேர்ந்தவர் செங்கல் சூளை தொழிலாளி. 65 வயதான இவர் 13 வயது சிறுமி ஒருவரை வளர்த்து வந்தார். இந்த சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில், 8-ம் வகுப்பு படித்து வந்தாள்.
இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பள்ளிக்கு சென்ற சிறுமி சோர்ந்து இருந்ததை கண்ட பள்ளி நிர்வாகத்தினர் அவளிடம் விசாரித்தனர். அப்போது தனது வளர்ப்பு தந்தை, பல முறை தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதற்கு நாகேஷ் (40) என்பவர் உடந்தையாக இருந்ததாகவும் தெரிவித்தாள்.
இது குறித்து பள்ளி நிர்வாகத்தினர் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி வின்சென்ட் சுந்தரராஜிடம் தகவல் தெரிவித்தனர். அவர் இது குறித்து ஓசூர் டவுன் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் டவுன் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா விசாரணை நடத்தி போக்சோ உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வளர்ப்பு தந்தை உள்பட 2 பேரையும் கைது செய்தார்.
இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக அவரது வளர்ப்பு தந்தைக்கு போக்சோ உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் 35 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.31 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த பலாத்காரத்திற்கு உடந்தையாக இருந்த நாகேசிற்கு 12 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜர் ஆகி வாதாடினார்.