பவானி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சுஷேல் (வயது 28). இவர் ஈரோடு மாவட்டம் பவானி புதிய பஸ் நிலையம் அருகே அடகு நகைக்கடை வைத்து உள்ளார். இந்த கடையில் தினேஷ், கவுதம் ஆகியோர் வேலை பார்த்து வருகிறார்கள். சம்பவத்தன்று இரவு அடகு கடையில் ரூ.3 லட்சத்து 37 ஆயிரத்து 900-யை வைத்து விட்டு, கடையை பூட்டிவிட்டு ஊழியர்கள் வீட்டுக்கு சென்று விட்டனர்.
மறுநாள் காலை அடகு கடைக்கு தினேசும், கவுதமும் சென்றனர். அப்போது கடையில் வைக்கப்பட்டு இருந்த ரூ.3 லட்சத்து 37 ஆயிரத்து 900-யை காணவில்லை. யாரோ மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள் கடையின் உரிமையாளரான சுஷேலுக்கும் தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து சுஷேல் அடகு கடைக்கு விரைந்து வந்து பார்வையிட்டார். பின்னர் அவர் பவானி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று திருட்டு நடந்த கடையை பார்வையிட்டனர். மேலும் அவர்கள் தினேஷ் மற்றும் கவுதம் ஆகியோரிடமும் விசாரணை நடத்தினார்கள்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அடகு கடையில் ரூ.3 லட்சத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.