திருச்சி,
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.34 லட்சம் மோசடி செய்ததாக திருச்சி பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அண்ணாநகரை சேர்ந்தவர் சுமதி. இவர் தனது மகனுக்கு வேலைவாங்கி தரும்படி திருச்சி கருமண்டபம் நட்சத்திர நகரை சேர்ந்த சரவணகுமார் மனைவி பத்மா (வயது 35) என்பவரை அணுகினார்.
ஏற்கனவே, தனக்கு தெரிந்த இலுப்பூர் அருகே உள்ள சேதுராப்பட்டி கணேசனுடன் சேர்ந்து பலருக்கு பத்மா அரசு வேலை வாங்கி கொடுத்ததை சுமதி அறிந்திருந்தாராம். எனவே, தனது மகனுக்கும் அரசு வேலை வாங்கி தரும்படி பத்மாவிடம் சுமதி கேட்டுள்ளார்.
அப்போது முன்பணமாக பத்மா பல லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். அதன்படி, பத்மா மற்றும் கணேசன் இருவரையும் சந்தித்து பல கட்டங்களில் ரூ.34 லட்சத்தை சுமதி கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், மாதங்கள் பல கடந்தும் அரசு வேலையும் வாங்கி கொடுக்கவில்லை. கொடுத்த பணத்தை திரும்ப கேட்டும் கொடுக்காமல் மிரட்டியதாக கூறப்படுகிறது.
தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சுமதி, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜை சந்தித்து புகார் கொடுத்தார். அவர், அந்த மனுவை திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க உத்தரவிட்டார். அதன் பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் காவேரி வழக்குப்பதிவு செய்து பத்மாவை கைது செய்தார். தலைமறைவான கணேசனை தேடி வருகிறார்.