புதுச்சேரி,
புதுவை புதுசாரம் விநாயக முருகன் நகர் முதல் குறுக்குத்தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 54). தொழிலாளி. இவரது மனைவி விஜயலட்சுமி (48). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகிவிட்டது. நேற்று முன்தினம் ரவி தனது சம்பள பணத்தில் ரூ.5 ஆயிரத்தை செலவு செய்து விட்டதாக தெரிகிறது. இதுபற்றி அவரது மனைவி கணக்கு கேட்டார். அதற்கு அவர் பதில் சொல்லாமல் சாகப்போவதாக கூறிவிட்டு வீட்டை விட்டுவெளியேறினார். வீட்டில் குடும்ப பிரச்சினை ஏற்படும் போதெல்லாம் சாகப்போவதாக ரவி மிரட்டி வருவது வழக்கம் என்று கூறப்படுகிறது. அதுபோல் சம்பள பணத்தை செலவு செய்ததால் ஏற்பட்ட பிரச்சினையிலும் சாகப் போவதாக மிரட்டியதை அவரது குடும்பத்தினர் சாதாரணமாக எடுத்துக் கொண்டனர். இந்தநிலையில் திலாஸ்பேட்டை கனகன் ஏரியில் உள்ள மரம் ஒன்றில் ரவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீஸ் ஏட்டு சுந்தரராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.