அருப்புக்கோட்டை,
ருப்புக்கோட்டையில் நில அளவையர் அறைக்கு நகராட்சி ஆணையர் சீல் வைத்தார்.
கட்டுமான பணி
அருப்புக்கோட்டை நகராட்சியில் புதிய கட்டுமான பணிகளுக்கு அனுமதி அளித்தல், இடத்தை அளப்பதற்கு, பட்டா பிரச்சினைகள் என பல்வேறு பணிகளுக்காக வருவாய்துறை சார்பில் கொண்டம்மாள் மற்றும் முனியாண்டி என்ற 2 நில அளவையர்கள் (சர்வேயர்கள்) நகராட்சி அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்காக நகராட்சி அலுவலகத்தின் மேற்பகுதியில் அறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இவர்கள் இருவரும் நகராட்சி அலுவலகத்திற்கு சரிவர வருவதில்லை என்ற புகார் எழுந்தது. இதனால் பொதுமக்கள் வீடு கட்ட அனுமதி பெற முடியாமலும் பல்வேறு வகையில் அலைக்கழிக்கப்படும் சூழல் ஏற்பட்டது.
அறைக்கு சீல்
இந்நிலையில் நகராட்சி ஆணையர் பாஸ்கரன் நகராட்சி அலுவலகத்தில் உள்ள நில அளவையர் அறைக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இது குறித்து நகராட்சி ஆணையர் பாஸ்கரன் கூறியதாவது:
நில அளவையர்கள் சரியாக வருவதில்லை என பொதுமக்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் வந்தன. புகாரின் அடிப்படையில் நில அளவையர்களின் அறைக்கு சீல் வைக்கப்பட்டது. இது குறித்து தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.