வேடசந்தூர்:
வேடசந்தூர் பகுதியில் ஏராளமான கல்குவாரிகள் உள்ளன. இங்கு உள்ள கல் குவாரிகளில் இருந்து கற்கள், ஜல்லி உள்ளிட்டவைகள் அரசு அனுமதியின்றி கொண்டு செல்லப்படுவதாக கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், திண்டுக்கல் புவியியல் மற்றும் கனிம வளத்துறை உதவி பொறியாளர் அஸ்வினி தலைமையில் கனிம வளத்துறையினர் நேற்று கோவிலூர் - எரியோடு சாலையில் புதுரோடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கற்களை ஏற்றி வந்த 2 லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர்.
அந்த லாரியை ஓட்டி வந்த டிரைவரை அதிகாரிகள் பிடித்தனர். மற்றொரு லாரி டிரைவர் மற்றும் அவருடன் வந்தவர்கள் லாரியை நிறுத்தி விட்டு தப்பியோடிவிட்டனர். விசாரணையில், லாரி டிரைவர் கல்லுக்கோட்டையை சேர்ந்த கிருஷ்ணன் (வயது 27) என்றும், அந்த லாரிகளில் அனுமதியின்றி கற்கள் ஏற்றி செல்வதும் தெரியவந்தது.
அந்த லாரிகளை பறிமுதல் செய்து எரியோடு போலீஸ் நிலையத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். இதுகுறித்து கனிம வளத்துறை உதவி பொறியாளா எரியோடு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணனை கைது செய்தார். மேலும் தப்பியோடியவர்களை தேடி வருகிறார்.