பரமக்குடி,
பரமக்குடி தாலுகாவில் கடந்த ஒரு வாரமாக வீடுகளில் செட்டாப் பாக்ஸ் பொருத்தும் பணியை கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மேற்கொண்டு வருகின்றனர். ஒரு இணைப்புக்கு ரூ.200 மட்டும் வசூல் செய்ய வேண்டும் என அரசு மேலாண்மை இயக்குனர் அறிவித்துள்ளார். ஆனால் சில பகுதிகளில் செப்டாப் பாக்ஸ் பொருத்த கூடுதல் கட்டணமாக ரூ.610 வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதன் காரணமாக செட்டாப் பாக்ஸ் வேண்டாம் என பலர் மறுத்து வருகின்றனர்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பரமக்குடி தாலுகா டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் வினியோகஸ்தர் அப்துல் மாலிக் கூறும்போது, சில பகுதிகளில் செட்டாப் பாக்ஸ் இணைப்புக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வருகிறது. செட்டாப் பாக்ஸ் முற்றிலும் இலவசம்.
அதன் இணைப்புக்கு ரூ.200-ம், சந்தா கட்டணம் ரூ.210-ம் சேர்த்து பொதுமக்களிடம் ரூ.410 மட்டுமே வசூலிக்க வேண்டும். கூடுதல் கட்டணம் பெறுவது குற்றமாகும். இதுதொடர்பாக ஆதாரத்துடன் புகார்கள் வந்தால் அரசு கேபிள் டி.வி. மண்டல துணை மேலாளர் உதவியுடன் சம்பந்தப்பட்ட கேபிள் டி.வி. ஆபரேட்டரின் உரிமம் ரத்து செய்யப்படும். கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் செட்டாப் பாக்ஸ் வாங்குவதற்கு சந்தாதாரர்கள் மறுப்பதாகவும் புகார்கள் வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.