மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: மதபோதகருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை சேலம் கோர்ட்டு தீர்ப்பு

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மதபோதகருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

சேலம்,

சேலம் அஸ்தம்பட்டி அடைக்கலம் நகரை சேர்ந்தவர் ஜெயசீலன்(வயது 69), மதபோதகர். அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் வீராணம் பகுதியை சேர்ந்த 13 வயதுடைய மாணவி ஒருவர் 8-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ந் தேதி ஜெயசீலன், பள்ளிக்கு நடந்து சென்ற அந்த மாணவியிடம் கதை கூறுவதாக கூறி அழைத்தார்.

பின்னர் அவர் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவியின் பெற்றோர் அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயசீலனை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்தது.

விசாரணை முடிந்ததால் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதாவது, மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஜெயசீலனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி விஜயகுமாரி தீர்ப்பு கூறினார்.

SCROLL FOR NEXT