குளச்சல்,
குளச்சலை தங்குதளமாக கொண்டு 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இயங்கி வருகின்றன. இந்த விசைப்படகுகளில் கடலுக்கு செல்லும் மீனவர்கள் சில நாட்கள் கடலிலேயே தங்கி இருந்து மீன் பிடித்துவிட்டு திரும்புவார்கள். அவர்கள் பிடித்து வரும் மீன்கள் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள ஏலக்கூடத்தில் ஏலம் விடப்படும்.
வழக்கமாக இந்த காலகட்டத்தில் சுறா மீன்களும், கேரை மீன்களும் அதிக அளவில் பிடிபடும். ஆனால், இந்த ஆண்டு கடலுக்கு செல்லும் மீனவர்கள் அதிகளவில் மீன் கிடைக்காமல் ஏமாற்றத்துடனே திரும்பி வருகிறார்கள். நேற்று காலை பல விசைப்படகுகள் கரை திரும்பின. அவற்றில் சில படகுகளில் நாக்கண்டம், வலம், செம்மீன் போன்ற மீன்கள் அதிகளவில் கிடைத்து இருந்தன.
சுறா மீன்
ஒரு விசைப்படகில் இருந்த மீனவர்கள் வலையில் 300 கிலோ எடை கொண்ட சுறா மீன் சிக்கியிருந்தது. அந்த மீனை மீனவர்கள் கரைக்கு கொண்டு சென்று, ஏலக்கூடத்தில் ஏலமிட்டனர். அந்த சுறா மீன் ரூ.48 ஆயிரத்துக்கு ஏலம் போனது.
இந்த ஒரு மீனை தவிர மற்ற மீனவர்களுக்கு பெரிய அளவில் மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தனர்.