திருக்கோவிலூர்,
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள கணக்கன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜவகர் மகன் ராஜீவ்காந்தி (வயது 25). இவருக்கும் அரகண்டநல்லூர் அருகே உள்ள ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் மகள் பிரியா என்பவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் மாமனார் வீட்டுக்கு வந்திருந்த ராஜீவ்காந்தி, கடந்த 23-ம் தேதி மாமனாருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள பனை மரத்தில் பனங்காய் பறிக்க சென்றிருக்கின்றார். அப்போது அவர் பனங்காய் பறித்துவிட்டு மரத்தில் இருந்து கீழே இறங்கியபோது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்துவிட்டார்.
இதனைக்கண்ட அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். ராஜீவ் காந்தி உடலை பார்த்து அவரது மனைவி பிரியா கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. இது குறித்து அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.