மங்களூரு,
கர்நாடகத்தில் போதைப்பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதுதொடர்பாக நாள்தோறும் புதிய புதிய தகவல்கள் வெளியாகி பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் கன்னட திரைஉலகிலும் பெரும் புயலை கிளப்பி உள்ளது. கன்னட திரை உலகில் நடிகர்-நடிகைகள் போதைப்பொருள் பயன்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள், கன்னட திரை உலகில் முன்னணி நடிகைகளாக உள்ள ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மேலும் ராகிணி, சஞ்சனா உள்பட 14 பேர் மீது பெங்களூரு காட்டன்பேட்டை போலீஸ் நிலையத்தில் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர நடிகைகளின் நண்பர்களான ரவிசங்கர், ராகுல், வீரேன் கண்ணா, பிரதிக் ஷெட்டி, லோயம் பெப்பர் சம்பா, ஆதித்யா அகர்வால், வைபவ் ஜெயின், பிரசாந்த் ரங்கா, பினால்டு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், போதைப்பொருள் விவகாரத்தில் மூளையாக செயல்பட்ட சிவபிரகாஷ், முன்னாள் மந்திரியின் மகன் ஆதித்யா ஆல்வா, சேக் பாசில் ஆகிய 3 பேரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
இதையடுத்து கர்நாடகம் முழுவதும் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் எம்.டி.எம்.ஏ. எனப்படும் போதைப்பொருளை வைத்திருந்ததாக 2 பேரை மாநகர குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள், 2 செல்போன்கள், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் கிஷோர் ஷெட்டி (வயது 30), அக்யுல் நவ்ஷீல் (28) என்பது தெரியவந்தது. அவர்களில் கிஷோர் ஷெட்டி நடன கலைஞரும், இந்தி நடிகரும் ஆவார். அவர், இந்தியில் பிரபுதேவா நடித்த ஏ.பி.சி.டி. என்ற ஒரு படத்தில் நடித்துள்ளார். மேலும் பெங்களூருவில் தனியார் கன்னட தொலைக்காட்சி நடத்திய நடன போட்டி நிகழ்ச்சியிலும் பங்கேற்று பரிசுகளை பெற்றுள்ளார்.
கைதாகி உள்ள கிஷோர் ஷெட்டி, மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து எம்.டி.எம்.ஏ. உள்ளிட்ட போதைப்பொருட்களை கடத்தி வந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு, மங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும் விருந்து நிகழ்ச்சிகளுக்கு சப்ளை செய்து வந்ததும் தெரியவந்தது. போதைப்பொருட்கள் விற்கும் கும்பலுடன் தொடர்புடைய அவர், பெங்களூருவில் கன்னட நடிகர்-நடிகைகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கும் விருந்து நிகழ்ச்சிகளுக்கும் போதைப்பொருட்களை சப்ளை செய்து வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அத்துடன் இந்தி திரைஉலகில் உள்ள நடிகர்-நடிகைகளுக்கும் அவர் போதைப்பொருள் சப்ளை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. தனியார் கன்னட தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக உள்ள நடிகை ஒருவர் சமீபத்தில் மங்களூருவில் விருந்து நிகழ்ச்சி நடத்தியதும், அந்த விருந்து நிகழ்ச்சிக்கு கிஷோர் ஷெட்டி போதைப்பொருள் சப்ளை செய்ததும் தெரியவந்தது.
கைதான நவ்ஷீல், வெளிநாட்டில் பாதுகாப்பு அதிகாரியாக வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. மேலும் அதிகமாக பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு, இந்தி நடிகர் கிஷோர் ஷெட்டியுடன் சேர்ந்து போதைப்பொருட்களை விற்று வந்தது தெரியவந்துள்ளது. கைதான 2 பேருக்கும் யார்-யாருடன் தொடர்பு உள்ளது?, கன்னடம் மற்றும் இந்தி நடிகர்-நடிகைகளுக்கு போதைப்பொருட்கள் சப்ளை செய்தார்களா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் மங்களூரு மாநகர குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மங்களூருவில் போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர் உள்பட 2 பேர் கைதானது பற்றி நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் விகாஸ் குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மங்களூருவில் போதைப்பொருள் விற்றதாக குலாய் பகுதியை சேர்ந்த கிஷோர் ஷெட்டி, சூரத்கல்லை சேர்ந்த அக்யுல் நவ்ஷீல் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மும்பையில் இருந்து எம்.டி.எம்.ஏ. என்னும் போதைப்பொருளை கடத்தி வந்தது விற்றது தெரியவந்துள்ளது. கிஷோர் ஷெட்டி இந்தி நடிகர் ஆவார். ஏ.பி.சி.டி. என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். நடன கலைஞராகவும் இருந்து வருகிறார். நவ்ஷீல், துபாயில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வந்தார். அதிக பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு போதைப்பொருட்கள் விற்கும் சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மும்பையில் இருந்து போதைப்பொருள் கடத்தி வந்ததால், இதில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். மங்களூரு மட்டுமின்றி பெங்களூருவில் நடந்த விருந்து நிகழ்ச்சிகளுக்கும் அவர்கள் போதைப்பொருள் சப்ளை செய்து வந்துள்ளனர். மங்களூருவில் விருந்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து போதைப்பொருட்கள் வினியோகித்து உள்ளனர். இந்த விருந்து நிகழ்ச்சிகள் பற்றி விவரங்களை சேகரித்து வருகிறோம். இந்த விருந்து நிகழ்ச்சிகளில் நடிகர்-நடிகைகள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுபற்றி விசாரித்து வருகிறோம். கைதான 2 பேர் மீதும் தேசிய போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் எங்களுக்கு சில முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளது. பெங்களூருவில் போதைப்பொருள் விற்பனை வழக்கில் கைதானவர்களுக்கும், இவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். மங்களூரு நகரில் போதைப்பொருள் புழக்கம் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் மக்கள், போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண் 100 மற்றும் 0824-2220800 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும். தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் வெளியிடப்படாது. இவ்வாறு அவர் கூறினார்.
பெங்களூருவை தொடர்ந்து மங்களூருவில் போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர் கைதாகியுள்ள சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.