மாவட்ட செய்திகள்

தந்தை இறந்த துக்கத்தில் கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை

கும்மிடிப்பூண்டி அருகே தந்தை இறந்த துக்கத்தில் கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டியை அடுத்த சின்ன ஓபுளாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தாஸ். இவரது மகன் ரவி (வயது 19). தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவரது தந்தை தாஸ் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவால் இறந்தார். தந்தை இறந்த சோகத்தில் ரவி மனம் உடைந்து போனார். யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்து வந்தார். நேற்று முன்தினத்தில் இருந்து ரவி மாயமானார்.

உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். அவர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று மாலை ரவியின் வீட்டில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள விவசாய தரை கிணற்றில் அவரது உடல் மிதந்தது. தந்தை இறந்த சோகத்தில் ரவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது. கும்மிடிப்பூண்டி சிப்காட் தீயணைப்பு துறையினர் கிணற்றில் இருந்து ரவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT