தஞ்சாவூர்,
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடாக பல்நோக்கு பயன்பாட்டு மையங்கள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். கூட்டத்திற்கு பேரிடர் மேலாண்மை ஆணையர் ராஜேந்திரரத்னு தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டாரத்தில் கரிசவயல், புதுப்பட்டினம், கள்ளிவயல், ராஜாமடம், கொள்ளுக்காடு, அதிராம்பட்டினம், பேராவூரணி வட்டாரத்தில் விளான்குளம், செந்தலைவயல், நாடியம் பிள்ளையார் திடல், மரக்காலவசை, மந்திரிபட்டினம் ஆகிய கடலோர கிராமங்களில் 14 பல்நோக்கு பயன்பாட்டு மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
இந்த மையங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கால்நடைகளை கட்டுவதற்கு இடம், வாகனங்கள் நிறுத்த இடம், சமையலறை, அவசர காலங்களில் பயன்படுத்தும் ஜெனரேட்டர் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் மழை காலங்களில் பள்ளி கட்டிடங்களில் தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்க முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்நோக்கு பயன்பாட்டு மையத்திற்கு பெரிய வாகனங்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக பாதைகள் அமைக்க வேண்டும். தெருவிளக்குகள் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், வருவாய் கோட்டாட்சியர்கள் சுரேஷ், கோவிந்தராசு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) முத்து மீனாட்சி, முதன்மைக்கல்வி அலுவலர் சுபாஷினி, பொதுப்பணித்துறை கட்டிட செயற்பொறியாளர் ரவிமனோகர் மற்றும் தலைமை ஆசிரியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தாசில்தார்கள், அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.