மாவட்ட செய்திகள்

தஞ்சை தற்காலிக காமராஜர் மார்க்கெட்டில் அழுகிய வெங்காய மூட்டைகளை கொட்டுவதால் துர்நாற்றம்

தஞ்சையில் உள்ள தற்காலிக காமராஜர் மார்க்கெட்டில் அழுகிய வெங்காய மூட்டைகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் இங்கு விஷ பாம்புகள் படையெடுப்பால் வியாபாரிகளும் அச்சமடைந்துள்ளனர்.

தினத்தந்தி

தஞ்சாவூர்,

தஞ்சை குழந்தை ஏசு கோவில் அருகே தற்காலிக காமராஜர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது இங்கு 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மொத்தம் மற்றும் சில்லறை விற்பனைகள் நடைபெற்று வருகின்றன. இந்த மார்க்கெட்டிற்கு மராட்டியம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தில் ஓசூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, பெரம்பலூர், அரியலூர், தேனி, சிவகங்கை, நிலக்கோட்டை, திருவையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது வழக்கம்.

கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த காமராஜர் மார்க்கெட் கடந்த 1-ந்தேதி முதல் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலைகள் மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள் பலர் அழுகிய வெங்காயங்களை மூட்டை மூட்டையாக மார்க்கெட்டில் முதலாவது நுழைவுவாயிலின் அருகே கொட்டி வைத்துள்ளனர்.

துர்நாற்றம் வீசுகிறது

இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. ஏற்கனவே சமீபத்தில் பெய்த மழையின் காரணமாகவும் இந்த அழுகிய வெங்காயம் மேலும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அந்த வழியாக மார்க்கெட்டில் காய்கறி வாங்க செல்லும் பொதுமக்கள், வெளியிலிருந்து வரும் வியாபாரிகள் மூக்கைப்பிடித்துக் கொண்டு செல்லும் நிலை தான் காணப்படுகிறது.

மேலும் இந்த மார்க்கெட் அருகில் முட்புதர்கள் காணப்படுவதால் அங்கிருந்து விஷப்பாம்புகளும் அடிக்கடி மார்க்கெட்டிற்கு படையெடுத்த வண்ணம் உள்ளது. இதனால் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சத்துடன் தான் இங்குள்ள வியாபாரிகளும் காணப்படுகின்றனர். இங்கு கொட்ட வேண்டாம் என வியாபாரிகள் சிலர் கேட்டுக்கொண்டும் யாரும் அதனை பொருட்படுத்துவதில்லை.

நோய் பரப்பும் இடம்

இதுகுறித்து வியாபாரிகள் சிலர் கூறுகையில், அழுகிய வெங்காயத்தை மார்க்கெட் பகுதியில் கொட்ட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டும் சில வியாபாரிகள் அதனை பொருட்படுத்தாமல் கொட்டி வைத்துவிடுகின்றனர். சாலையோர வியாபாரிகள், சிறு சிறு வியாபாரிகள் அந்த அழகிய வெங்காயத்தில் இருந்தும் அதனை கிளறி சில நல்ல வெங்காயங்களை பொருக்கி எடுத்து சென்று விடுகின்றனர்.

இதனால் ஏற்கனவே துர்நாற்றம் வீசிய நிலையில் மேலும் இதனை கிளறி விடுவதால் துர்நாற்றம் அதிகமாக வீசுகிறது. கொரோனா தொற்று பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் தற்போது மார்க்கெட்டும் நோய் பரப்பும் இடமாக மாறி வருகிறதுஎன்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து