திருச்சி,
திருச்சி பாலக்கரை செங்குளம் காலனி பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக குடி நீருடன் சாக்கடை நீர் கலந்து வருவதாகவும், இது தொடர்பாக பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தை நேற்று பெண்கள் முற்றுகையிட்டனர். அப்போது, சாக்கடையில் அடைப்பு ஏற்படுவதால் வெளியேறும் சாக்கடை கழிவுநீர், குடிநீருடன் கலந்து வருவதால் நோய் தொற்று ஏற்படுவதாக தெரிவித்தனர். இதையடுத்து பெண்களுடன் பாலக்கரை போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். சாக்கடையை உடனடியாக சரி செய்து தருவதாக உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.