பூந்தமல்லி,
பூந்தமல்லி பார்வதி நகரைச் சேர்ந்தவர் முனுசாமி(வயது 60). இவருடைய மனைவி பார்வதி(55). இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். பார்வதி, நேற்று மதியம் வேலை விஷயமாக நசரத்பேட்டையில் இருந்து பூந்தமல்லி நோக்கி தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
பூந்தமல்லி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நசரத்பேட்டை அருகே சென்றபோது பின்னால் வந்த லோடு வேன், மொபட் மீது மோதியது.
இதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த பார்வதி மீது வேனின் சக்கரம் ஏறி இறங்கியது. லோடு வேன் சக்கரத்தில் சிக்கிய பார்வதி, உடல் நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார், பலியான பார்வதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து லோடு வேன் டிரைவரான ஆற்காட்டைச் சேர்ந்த தசரதன்(51) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.