புதுக்கோட்டை, ஜூலை.1-
புதுக்கோட்டையில் அரசு இசைப்பள்ளியில் நிகழ்வாண்டுக்கான இருபாலர் மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் குரலிசை, வயலின், மிருதங்கம், பரதநாட்டியம் ஆகிய வகுப்புகளுக்கு விண்ணப்பிக்க 7-ம் வகுப்பு தேர்ச்சியும் நாதசுரம், தவில், தேவாரம் ஆகிய வகுப்புகளுக்கு விண்ணபிக்க எழுதப் படிக்கத் தெரிந்திருக்கவும் வேண்டும். பிளஸ்-2 முதல் 25 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்காலம் 3 ஆண்டுகள், பயிற்சி நேரம் காலை 10 மணி முதல் 4 மணிவரை ஆகும். அரசு சான்றிதழ் படிப்பான இப்பயிற்சியில் அரசுத்துறையில் வேலை வாய்ப்புகளும் வானொலி, தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் நிகழ்ச்சி வழங்க வாய்ப்புகளும் வழங்கப்படும். மேலும் இலவச பஸ் சலுகை, தங்கும் வசதி மற்றும் கல்வி உதவித் தொகை அரசு விதிகளுக்குட்பட்டு வழங்கப்படும். மாணவர்களுக்கு சீருடை, காலணி, சைக்கிள், அரசு விதிகளின் படி வழங்கப்படும். மாணவர்கள் அனைவருக்கும் ஊக்கத் தொகையாக மாதந்தோறும் ரூ.400 வழங்கப்படும். எனவே ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் புதுக்கோட்டை திலகர் திடலில் உள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளியில் தலைமை ஆசிரியரை நேரில் அணுகவும். இந்த தகவலை கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.