புதுச்சேரி,
புதுவை காவல்துறையில் காலியாக உள்ள 390 பணியிடங்களை நிரப்ப கடந்த 2018-ம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அறிவிப்பு வெளியிடப்பட்டு 2 ஆண்டுகள் ஆன நிலையிலும் இதுவரை காவலர்கள் தேர்வு நடத்தப்படவில்லை.
இதை கண்டித்தும், காவலர் தேர்வினை உடனடியாக நடத்த வலியுறுத்தியும் காவலர் தேர்வு அறிவிப்புக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்போவதாக மாணவர்கள் கூட்டமைப்பினர் அறிவித்திருந்தனர். இதன்படி அவர்கள் நேற்று புதுவை தலைமை தபால் நிலையம் அருகே கூடினார்கள்.
மெழுகுவர்த்தி ஏற்றி...
அங்கு காவலர் தேர்வு அறிவிப்பு குறித்த அச்சிட்டப்பட்ட பேனருக்கு மாலை அணிவித்து, மெழுகுவர்த்தி ஏற்றினார்கள். மேலும் சங்கு ஊதி போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இந்த போராட்டத்துக்கு மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சாமிநாதன் தலைமை தாங்கினார்.
போராட்டத்தில் பொதுச்செயலாளர் முருகன் நிர்வாகிகள் சிலம்பரசன், அபிநயன், வேல்முருகன், புவியரசன், தமிழ்ச்செல்வன், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த பிரகாஷ், மக்கள் நல்வாழ்வு இயக்க நிர்வாகி ராஜா, இந்திய தேசிய மக்கள் முன்னணி கலைப்பிரியன், மக்கள் எழுச்சி பேரவை வேல்முருகன், அரசியல் களஞ்சியம் சீனு.கந்தகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.