மாவட்ட செய்திகள்

மாணவர்கள் நவீன உலகிற்கு ஈடுகொடுக்கும் வகையில் திறமைகளை வளர்க்க வேண்டும்

மாணவர்கள் நவீன உலகிற்கு ஈடுகொடுக்கும் வகையில் திறமைகளை வளர்க்க வேண்டும் என்று இலவுவிளை மார் எப்ரேம் பொறியியல் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.

குழித்துறை,

மார்த்தாண்டம் அருகே இலவுவிளை மார் எப்ரேம் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரி தலைவர் ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் தலைமை தாங்கினார். தாளாளர் ஜோஸ்பின் ராஜ் தொடக்க உரை நிகழ்த்தினார். முதல்வர் லெனின் பிரட் அறிக்கை படித்தார்.

சிறப்பு விருந்தினராக சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பட்டம் பெற்றுள்ள மாணவ-மாணவிகள் கல்வியிலும், தொழில் நுட்ப அறிவிலும் சிறந்து விளங்கி நம் நாட்டிற்கும், வளர்ந்த நாடுகளுக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைக்க முன் வர வேண்டும்.

நவீன உலகம்

தினந்தோறும் மாறிவரும் தொழில்நுட்ப யுகத்திற்கு ஏற்ப ஒவ்வொரு மாணவரும் தங்களை தயார் படுத்த வேண்டும். மாணவர்கள் நவீன உலகிற்கு ஈடுகொடுக்கும் வகையில் தங்கள் திறமைகளை வளர்க்க வேண்டும். தொழில் முனைவோராக விரும்பும் மாணவர்கள் புதிய தொழில் நிறுவனங்களை தொடங்கி வேலை வாய்ப்புகளை வழங்கி தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு துணை புரிய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் கல்லூரி இயக்குனர் ஆஸ்டின், நிதி காப்பாளர் அருட்பணியாளர் அலக்ஸ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியில், துறைத்தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர் பபின் தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT