திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு மூலம் இடமாறுதல் வழங்கப்பட்டது. அதில் பள்ளிகளில் மாணவர்களின் விகிதாச்சார அடிப்படையில் கூடுதலாக உள்ள ஆசிரியர்கள் வேறு பள்ளிக்கு இடமாறுதல் செய்யப்பட்டனர்.
அதன்படி திண்டுக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் சில ஆசிரியர்கள் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டனர். இதனால் மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் ஆசிரியர்களை பிரிய மனமில்லாத மாணவிகளில் சிலர், ஆசிரியர்களை மாற்றக் கூடாது என்று கூறி பள்ளி முன்பு பதாகைகளை ஏந்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பிற ஆசிரியர்கள் மற்றும் போலீசார் வந்து மாணவிகளை சமாதானம் செய்து வகுப்பறைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதுபற்றி தகவல் அறிந்த கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.