நாகர்கோவில்,
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் தேங்காப்பட்டணம், இரையுமன் துறை பகுதியை பாதுகாப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் தலைமையில் நடந்தது. மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே, போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் நீரோடி முதல் பூத்துறை வரையுள்ள 7 கிராமங்களை சேர்ந்த பங்குத்தந்தைகள், மீனவ சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் இரையுமன்துறை பகுதியில் பழுதடைந்த சாலையை சீரமைக்கவும், தேங்காப்பட்டணம் துறைமுக முகத்துவாரத்தில் உள்ள மணல் திட்டுகளை அகற்றும் பணியினை விரைவில் தொடங்க வேண்டும், இரையுமன் துறை பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்கள்.
விரைவில் தொடங்கும்
அப்போது தளவாய்சுந்தரம் கூறியதாவது:-
தேங்காப்பட்டணம் துறைமுக முகத்துவாரத்தில் உள்ள மணல் திட்டுகளை அகற்றுவதற்கு ரூ.1.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மணல் திட்டுகளை அகற்றுவதற்கு ராட்சத கிரேன் எந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. விரைவில் மணல் திட்டை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் இரையுமன் துறையில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணிகளும் விரைவில் தொடங்கப்படும். மேலும் ரூ.33 கோடியில் இரையுமன் துறை பகுதியில் தூண்டில் வளைவு அமைப்பதற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, தமிழக அரசின் கவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கவனத்திற்குஎடுத்துச் சென்று, அப்பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த கூட்டத்தில், மாவட்ட அரசு ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு விற்பனை சங்கத்தலைவர் ஜாண்தங்கம், தமிழ்நாடு மாநில மீன்வள கூட்டுறவு இணைய தலைவர் சேவியர் மனோகரன், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணைய உறுப்பினர் ராஜன், அறங்காவலர் குழு உறுப்பினர் ஜெயசந்திரன் (எ) சந்துரு, பங்குத்தந்தைகள் டோனிஹேம்லட் (நீரோடி), ரிச்சர்டு (வள்ளவிளை), ஜெரோம் (ரவிபுத்தன்துறை), டோனி (சின்னத்துறை), ஜாண்டால் (தூத்தூர்), அன்சல் (பூத்துறை), மாவட்ட மீனவர் கூட்டுறவு இணைய நிர்வாக குழு உறுப்பினர் ஜோஸ்பில்பின், ஆன்றோ மோரிஸ் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.