மத்தூர்,
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள மலையாண்டஅள்ளியை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகள் பிரீத்தா (வயது 22). இவர் போச்சம்பள்ளியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார். இவரும், அதே பகுதியை சேர்ந்த அண்ணாமலை மகன் பிரபு செல்வன் (25) என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் பிரீத்தா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பிரபு செல்வனிடம் கூறியுள்ளார். ஆனால் அவர், பிரீத்தாவை திருமணம் செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக மனமுடைந்து காணப்பட்ட பிரீத்தா சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளித்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிரீத்தா நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக பிரபு செல்வனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.