பெங்களூரு,
கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 10-ந் தேதி பெலகாவி சுவர்ண சவுதாவில் தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் நாள் முழுவதும் சபை ஒத்திவைக்கப்பட்டது. அதையடுத்து இந்த கூட்டத்தொடர் 5 நாட்கள் நடைபெற்றன. சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்கள் விடுமுறையை அடுத்து சட்டசபை நேற்று மீண்டும் பெலகாவி சுவர்ண சவுதாவில் கூடியது. இந்த கூட்டத்தொடரின் 6-வது நாள் கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது.
கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. கூட்டம் தொடங்கியதும், துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் எழுந்து, சாம்ராஜ்நகர் மாவட்டம் சுலவாடி கிராமத்தில் வழங்கப்பட்ட கோவில் பிரசாதத்தை சாப்பிட்டவர்களில் மரணம் அடைந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து பேசினார்.
அவர் பேசுகையில், கோவில் பிரசாதத்தில் விஷம் கலந்த விவகாரத்தில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பிரசாதத்தில் உயிருக்கு கேடு விளைவிக்கும் ஏதோ ஒரு ரசாயனத்தை கலந்து இருப்பது சோதனை மூலம் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் மரணம் அடைந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் பாகல்கோட்டை மாவட்டம் முதோல் தாலுகா குளலி என்ற பகுதியில் சர்க்கரை ஆலையில் கொதிகலன் வெடித்து சிதறியதில் 4 பேர் மரணம் அடைந்தனர். அவர்களின் மறைவுக்கும் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா பேசுகையில், கோவில் பிரசாதம் சாப்பிட்டு மரணம் அடைந்தவர்கள் மற்றும் கொதிகலன் வெடித்ததில் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பிரசாதத்தில் விஷம் கலந்ததாக கூறப்படுபவர்களில் ஒருவரின் மகளே இந்த சம்பவத்தில் இறந்துள்ளார். இந்த சம்பவத்தில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ஹனூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நரேந்திரா பேசியதாவது:-
சுலவாடி கிராமத்தில் கோவில் பிரசாதம் சாப்பிட்டு சிலர் மரணம் அடைந்த தகவல் கிடைத்ததும் நான் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றேன். சென்னைக்கு சென்றிருந்த முதல்-மந்திரி குமாரசாமி மைசூருவுக்கு வந்தார்.