மாவட்ட செய்திகள்

கஞ்சா, போதை ஊசி விற்ற வழக்கு: குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது

கஞ்சா மற்றும் போதை ஊசி விற்ற வழக்கில் 2 பேரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் வடசேரி அழகர்கோணத்தை சேர்ந்தவர் ஜெயந்தர் (வயது 38). இவர் மீது வடசேரி, கோட்டார் மற்றும் நேசமணிநகர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் கஞ்சா மற்றும் போதை ஊசி விற்ற வழக்குகள் உள்ளன. எனினும் ஜெயந்தர் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீசார் முடிவு செய்தனர். அதைத் தொடர்ந்து ஜெயந்தரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய அனுமதிக்க கோரி, கலெக்டர் பிரசாந்த் வடநேரேவுக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் பரிந்துரை செய்தார்.

இதற்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து வடசேரி போலீசார் நேற்று ஜெயந்தரை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

இதே போல் அருகுவிளையை சேர்ந்த சேகர் என்ற லோடுமேன் சேகர் (43) என்பவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இவர் மீதும் கஞ்சா மற்றும் போதை ஊசிகள் விற்ற வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட 2 பேரும் ஏற்கனவே நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில் தற்போது அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்திருப்பதால் அவர்கள் 2 பேரும் பாளையங்கோட்டை ஜெயிலுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

SCROLL FOR NEXT