கொத்தனார் பிணம்
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே உள்ள களிவந்தபட்டு காமராஜர் தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 45). கொத்தனார். சமீபகாலமாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் களிவந்தபட்டு அருகே விவசாய கிணற்றில் குமார் இரண்டு கால்களில் மணல் மூட்டைகளை கட்டியபடி கிணற்றில் இறந்து கிடப்பதாக அந்த பகுதி மக்கள் மறைமலைநகர் தீயணைப்பு நிலையம் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
கொலையா?
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் மிதந்து கொண்டிருந்த குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமார், காலில் மணல் மூட்டைகளை கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது அவரை அடித்து காலில் மணல் மூட்டைகளை கட்டி கிணற்றில் தூக்கி வீசி விட்டு சென்றார்களா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.