புதுக்கோட்டை,
இந்தியா முழுவதும் நேற்று 70-வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கலெக்டர் கணேஷ் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் திறந்த ஜீப்பில் சென்று போலீசார், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டோரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதன் பிறகு சமாதான புறாவை பறக்கவிட்டார். பின்னர் கலெக்டர் கணேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் ஆகியோர் வண்ண பலூன்களை பறக்க விட்டனர்.
பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவிக்கும் வகையில், தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசு தாரர்களுக்கு கதர் ஆடைகளை அணிவித்தனர். தொடர்ந்து வருவாய்த்துறை, முன்னாள் படைவீரர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை வேளாண்மைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, மீன்வளத்துறை, தாட்கோ, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை என பல்வேறு துறைகளின் சார்பில் 75 பயனாளிகளுக்கு ரூ.49 லட்சத்து 23 ஆயிரத்து 163 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
தொடர்ந்து காவல்துறை, வருவாய்த்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, புவியியல் மற்றும் சுரங்கத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கருவூலத்துறை, சுகாதாரத்துறை, தொழிலாளர் நலத்துறை, வேளாண்மைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, நில அளவை பதிவேடுகள் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்துறை, பள்ளிக் கல்வித்துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த 676 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். இதேபோல காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 92 போலீஸ்காரர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.
தொடர்ந்து புதுக்கோட்டை அரசு இசைப்பள்ளி, திருவப்பூர் நகராட்சி உயர்நிலைப்பள்ளி, வல்லத்திராக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி உள்பட 8 பள்ளிகளை சேர்ந்த 832 மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட கண்கவர் கலைநிகழ்ச்சி நடைபெற்றன. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் ராணுவ வீரர்கள், ஆதிவாசிகள் போன்று வேடமணிந்து நடத்திய கலை நிகழ்ச்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. பின்னர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார், புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன் உள்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக விழாவிற்கு வருகை தந்த அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.