மேட்டூர்
மேட்டூர் அணையின் நீர்தேக்கப்பகுதிகளில் மீன் பிடிப்பதற்காக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி உரிமம் பெற்றுள்ளனர். மேட்டூர் அணையில் நீர் இருப்பு அதிகம் உள்ள காலங்களில் மீன்பிடி தொழிலை பிரதான தொழிலாக கொண்டுள்ள மீனவர்கள் அணையின் நீர்தேக்கப்பகுதிகளில் தற்காலிக முகாம்கள் அமைத்து மும்முரமாக மீன்பிடி தொழிலில் ஈடுபடுவது வழக்கம்.
இந்த நிலையில் நடப்பாண்டில் மேட்டூர் அணை வரலாறு காணாத அளவிற்கு வறண்டு போய் உள்ளது. மேட்டூர் அணையின் மீன் வளமும் குறைந்து காணப்படுகிறது. இதனால் மீன்பிடி தொழில் இன்றி மீனவர்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் மீனவர்கள் நீர்தேக்கப்பகுதியில் தங்களது பரிசல்களை கரையோரம் நிறுத்தி உள்ளனர். இதனால் மீனவர்கள் விவசாய கூலி வேலைகளுக்கும், கட்டிட வேலைகளுக்கும் சென்று வருகின்றனர். மேலும் அவர்கள் நீர் தேக்கப்பகுதிகளில் போடப்பட்டிருந்த தற்காலிக முகாம்களை அகற்றி கொண்டு வேலை தேடி பல்வேறு மாவட்டங்களுக்கு சென்றுள்ளனர்.