கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகே அகரம் வெப்பாளம்பட்டி கிராமத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் மலை உள்ளது. இந்த மலை மீது மராட்டியர் காலத்தில் பாதி கட்டப்பட்ட நிலையில் கோட்டை சுவர்கள் உள்ளன. மேலும் நீரை தேக்க சிறிய தாழ்வான பகுதியும் உள்ளது. இந்த மலைப்பகுதியில் கிருஷ்ணகிரி வரலாற்று ஆவண பதிவுக்குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். இதில் மலையின் பாதி உயரத்தில் இயற்கையாக அமைந்துள்ள குகையில் பழமையான பாறை ஓவியங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து கிருஷ்ணகிரி வரலாற்று ஆவண பதிவுக்குழு நிர்வாகி தமிழ்செல்வன் கூறியதாவது:-
இந்த பாறை ஓவியங்கள் தேர் போன்ற அமைப்புடனும், கோவில் போன்ற அமைப்புடனும் காணப்படுகிறது. இதன் அருகில் நட்சத்திரம் போன்ற அமைப்புடன் பாறை ஓவியங்கள் உள்ளன. இவை வெண்சாந்து ஓவியங்களாக உள்ளது. இது 3 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த ஓவியங்கள் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது வரலாற்று ஆவண பதிவுக்குழு நிர்வாகிகள் டேவிஸ், மதிவாணன், சென்னப்பன், காவேரி, ரவி, பாலாஜி மற்றும் பலர் உடன் இருந்தனர்.