மாவட்ட செய்திகள்

காமராஜருக்கு 150 அடி உயர சிலை அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம் பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் நடந்தது

காமராஜருக்கு 150 அடி உயர சிலை அமைக்கக்கோரி பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடந்தது.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

பெருந்தலைவர் காமராஜருக்கு கன்னியாகுமரியில் உள்ள நினைவு மண்டபம் அருகில் 150 அடி உயர சிலை அமைக்க வேண்டும். டச்சு படையை விரட்டியடித்த அனந்த பத்மநாபனுக்கு நினைவு மண்டபம் கட்ட வேண்டும். நாகர்கோவில் கீழ ராமன்புதூரில் (தட்டான்விளை) செயல்படாமல் இருக்கும் கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அனைத்து துறைகளிலும் நாடார் இனத்தவர்களுக்கு 18 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கோஷங்கள்

ஆர்ப்பாட்டத்துக்கு குமரி கிழக்கு மாவட்ட தலைவரும், மண்டல தலைவருமான அன்புகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநகர தலைவர் பிரேம், செயலாளர் அனிஸ், ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜய், மாவட்ட செயலாளர் சேவியர், பொருளாளர் தங்கவேல், அமைப்பாளர் பச்சைமால், வக்கீல் அணி தலைவர் துரைராஜ், சுதா, சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தையொட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

SCROLL FOR NEXT