மாவட்ட செய்திகள்

பெண்ணை அடிமையாக நடத்துவதற்கு அடிப்படையாக மதம் உள்ளது கனிமொழி எம்.பி. பேச்சு

பெண்ணை அடிமையாக நடத்துவதற்கு அடிப் படையாக மதம் உள்ளது என்று உலக நாத்திகர் மாநாட்டில் கனிமொழி எம்.பி. பேசினார்.

திருச்சி,

உலக நாத்திகர் மாநாடு திருச்சியில் நேற்று முன்தினம் தொடங்கி 3 நாட்கள் நடைபெற்று வருகிறது. நேற்று மாலை புத்தூர் பெரியார் மாளிகை வளாகத்தில் உலக நாத்திகர் மாநாட்டு பொதுக்கூட்டம் நடந்தது. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக கனிமொழி எம்.பி., விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பன்னாட்டு மனிதநேய நன்னெறி ஒன்றியத்தின் செயல் அலுவலர் கேரி மெக்லேலண்ட், ஆலோசனை இயக்குனர் எலிசபெத் ஒகேசி மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.

கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

பெரியாரை நாத்திகர் என்று மட்டும் கூற முடியாது. அவர் ஒரு மனிதநேயர். பெரியார் கடவுள் மறுப்பை கையில் எடுக்க காரணம், மனிதர்கள் கடவுளின் பெயரால் அழித்து கொண்டதை பார்த்து தான். பெண்ணை அடிமையாக நடத்துவதற்கு அடிப்படையாக மதம் உள்ளது. இங்கு ஆணுக்கு பெண் சமம் என்று ஏதாவது ஒரு மதம் சொல்கிறதா?. மதவாதிகள் என்று சொல்லக்கூடியவர்கள் பெண்கள் இப்படி தான் வாழ வேண்டும் என்று கூறுகிறார்கள்.

பொதுவாக ஆண்களைவிட பெண்களுக்கு மத நம்பிக்கை அதிகம் என்று சொல்வார்கள். அதற்கு காரணம் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டதும், அவர்களை வீட்டில் பூட்டி வைத்ததும் தான். கடவுள் இல்லை என்று சொல்பவர்களுக்கு வரும் மிரட்டல்களுக்கு பதில் அளிக்கும் வகையில் ஒருவரையொருவர் கையை பிடித்து கொண்டு உன்னோடு நான் இருக்கிறேன் என்று பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தொல்.திருமாவளவன் பேசுகையில், பெரியார் தனது இறுதி மூச்சு இருக்கும் வரை கடவுள் மறுப்பு கொள்கையை பற்றி பேசினார். உலகில் எத்தனை கொள்கைகள் உருவாக்கப்பட்டாலும் தலைசிறந்த கொள்கை மனிதநேயம் தான். இப்போது ரஜினி ஆன்மிக அரசியலை முன்னெடுக்க போவதாக கூறுகிறார்.

மதம், சாதி சாராத ஆன்மிக அரசியல் இருக்க முடியாது. ஆன்மிக அரசியல் என்பதே மதம் சார்ந்தது தான். ரஜினி ஆன்மிக அரசியல் என்று கூறுவதால் மதவாதத்தின் இன்னொரு சக்தியாக அவர் முன்னிறுத்தப்படுவதாக தான் நாம் அறிகிறோம். தமிழகத்தில் பல தலைவர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் கட்டுப்பாட்டில் தான் இயங்கி கொண்டு இருக்கிறார்கள். ரஜினியை இயக்குவதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தான் என்றார்.

முன்னதாக திராவிடர் கழக துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் வரவேற்றார். முடிவில் மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ் நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT