மாவட்ட செய்திகள்

மாணவர் சேர்க்கைக்கு வீடு தேடிச்செல்லும் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் பெற்றோரிடம் பழத்துடன் தாம்பூலம் தட்டு கொடுத்து அழைப்பு

அனைத்து வகை பள்ளிகளில் 1 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன்படி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

சென்னை,

கொரோனா தொற்று நோய் காரணமாக பள்ளிகள் திறப்பு பற்றி எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருக்கின்றன. இருப்பினும், 2020-2021-ம் கல்வியாண்டுக்கான வகுப்பு பாடங்கள் ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சிகள் வாயிலாக நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் கடந்த 17-ந்தேதி முதல் அனைத்து வகை பள்ளிகளில் 1 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன்படி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

இந்த நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள சென்னை உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், பள்ளி அமைந்துள்ள பகுதிகளை சுற்றியுள்ள வீடுகளுக்கு சென்று, பள்ளியின் சிறப்பம்சங்கள் குறித்து தெரிவித்து மாணவர்களை சேர்க்க பெற்றோரிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

அப்போது அவர்கள் பெற்றோரிடம் பழத்துடன் தாம்பூலம் தட்டு, வெற்றிலை, பாக்கு மற்றும் பள்ளியின் சிறப்பம்சங்கள் குறித்த துண்டு பிரசுரத்தையும் அதில் வைத்து ஆசிரியர்கள் வழங்கி பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க அன்போடு அழைக்கின்றனர். கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கும் சூழ்நிலையில் தனியார் பள்ளிகள் 100 சதவீதம் கட்டணம் செலுத்த நிர்ப்பந்தித்து வருகின்றனர். அந்தவகையில் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களின் இந்த செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT