மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் மணல் திருட்டில் ஈடுபட்ட பட்டதாரி வாலிபர் மண் சரிந்து சாவு : நண்பர் உயிர் தப்பினார்

வாழப்பாடி அருகே நள்ளிரவில் மணல் திருட்டில் ஈடுபட்ட போது, மண் சரிந்து விழுந்து அமுக்கியதில் பட்டதாரி வாலிபர் பரிதாபமாக இறந்தார். அவருடன் சென்ற நண்பர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

அயோத்தியாப்பட்டணம்,

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள அத்தனூர் பட்டியை சேர்ந்தவர் லோகேஸ்வரன் (வயது 21), பட்டதாரியான இவர் கல்லூரியில் உடன் படித்த முத்து (21) என்பவர் உள்பட நண்பர்கள் 4 பேருடன் பேளூர் பேரூராட்சி பகுதியில் உள்ள வசிஷ்ட நதிக்கரையில் மணல் அள்ள நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் சென்றார்.

அனுமதியின்றி அள்ளுவதால் அவர்கள் இரவு நேரத்தில் ஏற்கனவே மணல் அள்ளப்பட்டு இருந்த 10 அடி ஆழ குழி பகுதிக்கு சென்றனர். குழிக்குள் லோகேஸ்வரனும், முத்துவும் இறங்கி மணல் அள்ளி உள்ளனர். அப்போது குழியின் மேல் பகுதியில் இருந்து திடீரென மண் சரிந்தது. இதில் லோகேஸ்வரனும், அவருடைய நண்பர் முத்துவும் எதிர்பாராதவிதமாக குழியில் புதைந்துள்ளனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் உடனடியாக 2 பேரையும் மீட்க முயன்றனர். இதில் முத்துவை காயங்களுடன் மீட்டனர். ஆனால் மண்ணில் புதைந்த லோகேஸ்வரன் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும், வாழப்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சூர்யமூர்த்தி தலைமையில் வாழப்பாடி போலீசார் அங்கு விரைந்து வந்து பொக்லைன் எந்திரம் மூலம், மண்ணில் புதைந்த லோகேஸ்வரனின் உடலை மீட்டனர். பின்னர் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக உடலை அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், பேளூரில் முத்து வீடு கட்டுவதற்காக அவருடைய நண்பர்களான லோகேஸ்வரன், மணிகண்டன் (21), அரவிந்த்(19), அலெக்சாண்டர் (21) ஆகிய 5 பேரும் சாக்குமூட்டைகளில் மணல் அள்ளச்சென்ற போது, இந்த துயர சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது. இது குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வசிஷ்ட நதியில் மணல் திருட்டு சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்த நிலையில் நடந்துள்ள இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...