தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த ஜெபராஜ் (வயது 62) என்பவர் கடந்த 2017-ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த மரியசுரேஷ்(37) என்பவரை முன்விரோதம் காரணமாக பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தார். இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை செய்து குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் எண்-II-ல் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா நேற்று ஜெபராஜ் என்பரை குற்றவாளி என தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த தூத்துக்குடி நகர உட்கோட்ட டி.எஸ்.பி. சுனில், இந்த வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த தாளமுத்துநகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அருளப்பன், தாளமுத்துநகர் காவல் நிலைய காவல்துறையினர், அப்போதைய தாளமுத்துநகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வனிதாராணி மற்றும் நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் சேவியர் ஞானப்பிரகாசம் ஆகியோரை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.