மாவட்ட செய்திகள்

மாட்டுக்கறி உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்ட 54 பேர் கைது போலீசாருடன் தள்ளு, முள்ளு

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் மாட்டுக்கறி உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்ட 54 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் போராட்டத்தை தடுத்து நிறுத்த முயன்றதால் போலீ சாருடன் தள்ளு, முள்ளு ஏற்பட்டது.

திருச்சி,

கால்நடை சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்து மத்திய அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்தநிலையில் சென்னை ஐ.ஐ.டி.யில் மாட்டுக்கறி திருவிழா நடத்திய மாணவர் சூரஜ் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தியும், மாட்டு இறைச்சிக்கு தடை விதித்த மத்திய அரசை கண்டித்தும் மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் மாட்டுக்கறி திருவிழா என்னும் மாட்டுக்கறி உண்ணும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தனர்.

இதற்கு போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். இதனை தொடர்ந்து நேற்று காலை போலீசாரின் தடையை மீறி மாட்டுக்கறி திருவிழாவை நடத்த மத்திய பஸ் நிலையத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செழியன் தலைமையில் ஏராளமானோர் திரண்டனர். இதனையொட்டி அங்கு போலீஸ் துணை கமிஷனர் பிரபாகரன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர். அப்போது மக்கள் அதிகாரம் அமைப்பினர் மத்திய பஸ் நிலையத்தில் மாட்டுக்கறியை சாப்பிட்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

54 பேர் கைது

உடனே போலீசார் அவர்களிடம் இருந்து கறியை பறித்து போராட்டத்தை தடுத்து நிறுத்த முயன்றதால் போலீசாருடன் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் பொதுமக்களுக்கும் மாட்டுக்கறியை வழங்க முயற்சித்தனர். ஆனால் போலீசார் தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். இதில் 12 பெண்கள், 7 குழந்தைகள் உள்பட மொத்தம் 54 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான அனைவரும் ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...