சென்னை,
சென்னை பெசன்ட் நகர் அருகே உள்ள ஊரூர் குப்பம் அருகில், அடையாறு முகத்துவாரத்தில் உள்ள கடலோரத்தில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு கிழங்கா, மடவை, ஜிலேபி, கெண்டை மீன்கள் ஆயிரக்கணக்கானவை செத்து கரையில் ஒதுங்கின. இவை அனைத்தும் கடலில் வாழும் மீன்கள் தான்.
ஒவ்வொரு 5 மணி நேரத்துக்கும் ஒருமுறை கடல் நீர் மட்டம் அதிகரிக்கும். அப்போது மீன்கள் கழிமுகத்துக்கு வருவது வழக்கம். எனவே மீன்கள் செத்து கரை ஒதுங்கியதற்கு காரணம் அடையாறு ஆற்றில் நீருடன் கலந்து வரும் ரசாயனம் காரணமா? அல்லது சுனாமி அறிகுறியா? என அப்பகுதி மீனவர்கள் குழப்பத்தில் தவித்தனர்.
இந்த நிலையில், கடலில் உள்ள மீன்கள் இனப்பெருக்கத்துக்காக முகத்துவாரத்துக்கு வரும் என்றும், முகத்துவார பகுதியில் உள்ள தண்ணீரில் போதிய ஆக்சிஜன் இல்லாததால் மீன்கள் உயிர் இழந்து இருக்கலாம் என்றும் கடல் ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறும்போது, மழை காரணமாக நன்னீர் அடையாறு முகத்துவாரம் வழியாக கடலுக்குள் சென்று கலந்ததால் உப்பு நீர் குறைந்து மீன்கள் இறப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், மத்திய, மாநில மீன்வள துறையினரிடம் மாதிரி எடுக்க சொல்லி இருக்கிறேன். மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அறிக்கை வெளியிடப்படும் என்று கூறினார்.