மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரியில் கட்டப்பட்டுள்ள திருப்பதி கோவிலுக்கு தனி அதிகாரி-8 அர்ச்சகர்கள் நியமனம்: கும்பாபிஷேக பணிகள் தீவிரம்

திருப்பதி கோவிலுக்கு தனி அதிகாரி மற்றும் 8 அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டு கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தினத்தந்தி

கன்னியாகுமரி,

கன்னியாகுமரியில் ரூ.22 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு தனி அதிகாரி மற்றும் 8 அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டு கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கன்னியாகுமரி விவேகானந்தபுரம் விவேகானந்த கேந்திர வளாகத்தில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டுள்ளது. 5 ஏக்கர் பரப்பில் ரூ.22 கோடியே 50 லட்சம் செலவில் பிரம்மாண்டமாக இந்த கோவில் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் கட்டுமான பணிகள் முழுவதும் நிறைவடைந்துள்ளது.

தொடர்ந்து திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சங்கால் தலைமையிலான குழுவினர் இந்த கோவிலை ஆய்வு செய்தனர். பின்னர் அடுத்த மாதம் (ஜனவரி) கும்பாபிஷேகம் நடைபெறும் என்றும் கூறினர். தொடர்ந்து கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் அமைக்க கொடிமரம், சாமி சிலைகள் தயாராகவே உள்ளது. மேலும், திருப்பதி கோவிலில் உள்ளது போலவே இங்கு தேரோடும் 4 மாட வீதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மாடவீதிகளில் அலங்கார கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. கோவிலின் முன்பகுதியில் புல்வெளி பூங்கா அமைக்கும் பணியும், சின்னமுட்டம் துறைமுகத்துக்கு செல்லும் சாலையில் இருந்து கோவிலுக்கு தனியாக இணைப்பு சாலை அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.

இந்தநிலையில் கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு தனி அதிகாரியாக சென்னையில் உள்ள திருப்பதி திருமலை தேவஸ்தான உள்ளூர் தகவல் மற்றும் ஆலோசனை மைய உதவி செயல் அலுவலர் ரவி நியமிக்கப்பட்டு உள்ளார். மேலும், கோவிலுக்கு முதல் கட்டமாக 8 அர்ச்சகர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நியமித்து உள்ளது.


விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து