மாவட்ட செய்திகள்

புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பள்ளிக்கல்வி துறையில் பணியாளர்களை நியமிக்க வேண்டும் - மாநில பொதுச்செயலாளர் பேட்டி

புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பள்ளி கல்வி துறையில் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று நிர்வாக அலுவலர் சங்க மாநில பொது செயலாளர் தெரிவித்தார்.

பரமக்குடி,

பள்ளிக்கல்வி துறை நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட பேரவை கூட்டம் பரமக்குடி முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பு செயலாளர் முனியசாமி, ஆலோசகர் பெர்ணான்டோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் கோவிந்தராஜன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் தர்மலிங்கம் செயல் அறிக்கையையும், மாவட்ட பொருளாளர் ராமச்சந்திரன் நிதி நிலை அறிக்கையையும் தாக்கல் செய்தனர். கூட்டத்தில் மாநில பொதுச்செலாளர் முருகன், மாநில அமைப்பு செயலாளர் குலாம் ரபீக் உள்பட நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர்.

அதைத்தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். நிகழ்ச்சியை ஆசிரியர் ஜெயபிரகாஷ் தொகுத்து வழங்கினார். முடிவில் மாநில செயற்குழு உறுப்பினர் குமரேசன் நன்றி கூறினார். பின்னர் மாநில பொது செயலாளர் முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:- வருவாய் மாவட்ட அளவில் அலுவலக நிர்வாக பணிகளை ஒருங்கிணைப்பு செய்யும் வகையில் அமைச்சு பணியாளர் நிலையில் நேர்முக உதவியாளர் (நிர்வாகம்) என்ற பணியிடத்தை அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் வழங்க வேண்டும். அமைச்சு பணியாளர்களுக்கு அரசாணை எண் 595-ல் தெரிவித்துள்ள படி இணை இயக்குனர், துணை இயக்குனர், பணியிடங்களை வழங்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதை உடனே அமல்படுத்தி பணியமர்த்த வேண்டும். ஆய்வக உதவியாளர்களை இளநிலை உதவியாளர்களாக பணிமாறுதல் செய்ய வேண்டும். அனைத்து அலுவலகங்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து பணியாளர்களுக்கு கணினி வசதி ஏற்படுத்தி அதற்கான பயிற்சியும் அளிக்க வேண்டும். புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கு உடனே பணியாளர்களை நியமிக்க வேண்டும். அரசால் வழங்கப்படும் நலத்திட்ட பொருட்களை பாதுகாப்பான முறையில் வைத்து மாணவர்களுக்கு வழங்க புதிய சேமிப்பு கிட்டங்கி கட்டிடம் கட்டித்தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.