மும்பை,
கொரோனா ஊரடங்கின் போது பொது மக்களிடம் வழக்கத்தைவிட அதிகளவில் மின் கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஒரு சில பகுதிகளில் பொது மக்கள் வழக்கத்தைவிட 3 மடங்கு மின் கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுகுறித்து பல பிரபலங்களும் சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டி இருந்தனர்.
இதேபோல கடந்த ஜூலை மாதம், அதிக மின் கட்டண பிரச்சினையை சந்திக்கும் மக்களின் குறைகளை தீர்க்குமாறு மும்பை ஐகோர்ட்டு மாநில மின் பகிர்மான நிறுவனத்திற்கு உத்தரவிட்டு இருந்தது. எனினும் தொடர்ந்து பல பகுதிகளில் மின்நிறுவனங்கள் பொது மக்களிடம் அதிக மின்கட்டணத்தை வசூலித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே சந்தித்து பேசினார். அப்போது அவர் அதிக மின்கட்டண விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கவர்னரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். ராஜ் தாக்கரேவுடன் அவரது மகன் அமித் ராஜ்தாக்கரே, அந்த கட்சியை சேர்ந்த பாலநந்த்காவ்கர், பிரமோத் பாட்டீல், நிதின் சர்தேசாய் உள்ளிட்டவர்களும் சென்று இருந்தனர்.
இந்த சந்திப்பு குறித்து ராஜ்பவன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ராஜ் தாக்கரே கட்சி பிரதிநிதிகளுடன் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்தார். அவர்கள் பொது மக்களிடம் அதிக மின் கட்டணம் வசூலிக்கப்படும் விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க கேட்டு கொண்டனர். மேலும் மனுவையும் கொடுத்தனர் என கூறப்பட்டுள்ளது.