அரிமளம்
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே உள்ள பொந்துபுலியில் சர்வதேச குழந்தைகள் விளையாட்டு உரிமை தினத்தை முன்னிட்டு தனியார் அறக்கட்டளைகள் சார்பில் பாரம்பரிய விளையாட்டு திருவிழா நடைபெற்றது. இதற்கு தனியார் தொண்டு நிறுவன இயக்குனர் ஆதப்பன் தலைமை தாங்கினார். நிறுவன தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் பிரிசில்லா கலந்து கொண்டு பேசுகையில், சர்வதேச குழந்தைகள் விளையாட்டு உரிமை தினமாக அறிவித்துள்ளதை தொடர்ந்து, காணாமல் போன பாரம்பரிய விளையாட்டுகளை அடையாளம் கண்டு, குழந்தைகள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இப்பாரம்பரிய விளையாட்டு விழா நடத்தப்படுகிறது, என்றார்.
விழாவில் பல்லாங்குழி, குலை குலையா முந்திரிக்கா, நொண்டி, பூப்பறிக்க வருகிறோம், கபடி, கயிறு தாண்டுதல், கிச்சு கிச்சு தாம்பாழம், திரி திரி பொம்மை, பச்சைக்குதிரை, இளவட்ட கல் தூக்குதல், ஸ்கிப்பிங் போன்ற 20-க்கும் அதிகமான பாரம்பரிய விளையாட்டுகள் நடத்தப்பட்டது. இதில் ரோஸ் நிறுவன பணியாளர்கள் அகிலா, அனிதா போஸ், சரவணன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள், பெண்கள் கலந்து கொண்டனர். முன்னதாக ஒருங்கிணைப்பாளர் விஜயா வரவேற்றார். முடிவில் காயத்ரி நன்றி கூறினார்.