மாவட்ட செய்திகள்

ரெயில் பயணிகளிடம் செல்போன் திருடிய 4 பேர் கைது

ரெயில் பயணிகளிடம் செல்போன் திருடி வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

நவிமும்பை கன்டேஸ்வர் ரெயில் நிலையத்தில் பயணிகளிடம் செல்போன் திருடும் கும்பலை பிடிக்க ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். சம்பவத்தன்று அந்த கும்பலை சேர்ந்த வாலிபர் ஒருவர் ரெயில் நிலையத்தில் சுற்றிக்கொண்டிருப்பதை கவனித்த ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தியானேஸ்வர் அவரை மடக்கி பிடிக்க முயன்றார். ஆனால் அந்த வாலிபர் தப்பி ஓட்டம் பிடித்தார். மேலும் வெளியே நின்றிருந்த காரில் ஏறி தப்பிச்சென்றார்.

ரெயில்வே போலீசார் அந்த வாகனத்தை 8 கி.மீ. வரையிலும் விரட்டிச் சென்றனர். ஆனால் அந்த கார் வேகமாக புனே நோக்கி சென்றது. இது குறித்து புனே போலீசுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அவர் புனே போலீசாரிடமும் சிக்காமல் தப்பினார்.

இந்தநிலையில் அந்த கார் மும்பை-பெங்களூரு நெடுஞ்சாலையில் செல்வது தெரியவந்தது. எனவே போலீசார் சத்தாரா, கோலாப்பூர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அந்த காரை கோலாப்பூரில் போலீசார் மடக்கினர். மேலும் காரில் இருந்த அந்த வாலிபரையும் கைது செய்தனர்.

காரில் சோதனை போட்டதில் 19 திருட்டு செல்போன்கள் சிக்கின. அவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் கொடுத்த தகவலின்பேரில், செல்போன் திருட்டில் தொடர்புடைய மேலும் 3 பேர் சிக்கினர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

விசரணையில், அவர்களது பெயர் திப்பு பட்டேல் (வயது23), வெங்கடேஷ் கோகர்(23), சரண் போட்ராஜ் (18), சந்து ரெட்டி(23) என்பது தெரியவந்தது.

SCROLL FOR NEXT