பனைக்குளம்,
மண்டபம் ஊராட்சி ஒன்றியம் பட்டணம்காத்தான் முதல்நிலை ஊராட்சிக்கு உட்பட்ட இடத்தில் இயங்கி வரும் மீன் மார்க்கெட், காய்கறி மார்க்கெட் மற்றும் இறைச்சி கூடங்கள் உள்ளிட்டவைகளை உடனடியாக இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கையை கலெக்டர் வீரராகவராவ் தீவிரப்படுத்தி உள்ளார். அதன்படி டி.பிளாக் அம்மா பூங்கா அருகில் உள்ள இடத்தை தேர்வு செய்து அந்த இடத்தை சுத்தம் செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதற்கான நிகழ்ச்சியில் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், ராமநாதபுரம் தாசில்தார் முருகவேல், மண்டபம் ஒன்றிய ஆணையாளர் சேவுகபெருமாள், பட்டணம்காத்தான் ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா மருது, ஒன்றிய கவுன்சிலர் மருதுபாண்டியன், ஊராட்சி செயலர் நாகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பாரதி நகரில் உள்ள மீன் மார்க்கெட், காய்கறி மார்க்கெட், இறைச்சி வியாபாரிகள் மற்றும் ராமேசுவரம் நெடுஞ்சாலை அருகில் கடை வைத்துள்ளவர்கள் தங்களது கடைகளை மாற்றம் செய்து, அங்கு பொருட்களை விற்பனை செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.