ஓட்டப்பிடாரம்,
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள ஓசநூத்து கிராமத்தை சேர்ந்தவர் வேல். இவருடைய மகன் பெருமாள் (வயது 31). இவர் தூத்துக்குடியில் உள்ள அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெருமாள் ஓட்டப்பிடாரத்தில் உள்ள தனது நண்பரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அவர் ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகம் அருகே வந்த போது, அங்கு ரோட்டோரத்தில் ஒரு லாரி நின்று கொண்டு இருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள், லாரியின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பெருமாள் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஓட்டப்பிடாரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பெருமாள் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவலிங்கசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.