மாவட்ட செய்திகள்

திருவேங்கடத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்து காயம் அடைந்த 2 பேர் சாவு

திருவேங்கடத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்து காயம் அடைந்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தினத்தந்தி

திருவேங்கடம்,

தென்காசி மாவட்டம் திருவேங்கடம்-கோவில்பட்டி ரோடு சங்குபட்டி விலக்கு அருகில் தனியாருக்கு சொந்தமான கியாஸ் ஏஜென்சி குடோன் உள்ளது. இங்கு மேலாளராக திருவேங்கடத்தைச் சேர்ந்த வைகுண்டம் (வயது 70) பணியாற்றி வந்தார். இவர் குடோன் வளாகத்தில் உள்ள அறையிலேயே தங்கியிருந்தார்.

இந்த கியாஸ் ஏஜென்சி நிறுவனத்தில் நெல்லை தாழையூத்தைச் சேர்ந்த நயினார் மகன் காளி (36) சிலிண்டர் சப்ளை செய்யும் ஊழியராகவும், திருவேங்கடம் அருகே வீராணபுரத்தைச் சேர்ந்த நடராஜன் மகன் பசுபதி பாண்டியன் (25) லோடு ஆட்டோ டிரைவராகவும் வேலை செய்தனர்.

சிலிண்டர் வெடித்து...

கடந்த 23-ந்தேதி பழுதடைந்த சிலிண்டரை பழுது நீக்குவதற்காக, பசுபதி பாண்டியன் தனது லோடு ஆட்டோவில் வைகுண்டத்தின் அறைக்கு எடுத்து சென்றார். அவருடன் காளியும் சென்றார். அப்போது அறையில் வைகுண்டம் சமையல் செய்து கொண்டிருந்தார். பின்னர் அவர் தனது அறையின் வாசலில் வைத்து, பழுதடைந்த சிலிண்டரை பழுது நீக்க முயன்றார். அப்போது அந்த சிலிண்டரில் இருந்து திடீரென்று கியாஸ் கசிந்ததால், தீப்பிடித்து எரிந்து வெடித்து சிதறியது.

இதில் உடல் கருகி பலத்த காயம் அடைந்த வைகுண்டம், காளி, பசுபதி பாண்டியன் ஆகிய 3 பேரையும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் வைகுண்டம், காளி ஆகிய 2 பேரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

போலீசார் விசாரணை

படுகாயம் அடைந்த பசுபதி பாண்டியனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருவேங்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த காளிக்கு உமாசக்தி என்ற மனைவியும், இசைராணி (15), விஜயராணி (10) ஆகிய 2 மகள்களும் உள்ளனர். இறந்த வைகுண்டத்துக்கு திருமணம் ஆகவில்லை. திருவேங்கடத்தில் சிலிண்டர் வெடித்து 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து