அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தட்டான் வயல் அரசு ஊராட்சி தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சொக்கலிங்கம் (வயது 52). இவரது உறவினர் காளிதாஸ். இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் நேற்று அறந்தாங்கிக்கு சென்று கொண்டிருந்தனர். மேல்மங்கலம் பஸ் நிலையம் அருகே வந்த போது மேல்மங்கலத்தை சேர்ந்த சத்தியராஜ் (40), ரெங்கநாதன் ஆகிய 2 பேர் வந்த மோட்டார் சைக்கிளும், சொக்கலிங்கம் வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
2 பேர் பலி
இந்த விபத்தில் ஆசிரியர் சொக்கலிங்கம், சத்தியராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ரெங்கநாதன், காளிதாஸ் ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு கோகிலா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சொக்கலிங்கம், சத்தியராஜ் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நாகுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு, நேர் மோதிக் கொண்டதில் 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.