கரூர்,
கரூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கரூர் மாவட்டத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாமலும், தங்களது நிறுவனங்களை முறையாக பதிவு செய்யாமலும் இயங்கி வரும் பல போலி நிதி நிறுவனங்கள் ஆட்டு பண்ணை திட்டம், நாட்டுகோழி பண்ணை திட்டம், ஈ.மு.கோழி பண்ணை திட்டம், கொப்பரைதேங்காய் பண்ணைதிட்டம், மாட்டு பண்ணை திட்டம், தங்க நகைகள் (ஜூவல்லரி கடைகள் மூலம்) முதலீட்டு திட்டம், வாரச்சீட்டு, மாத சீட்டு, தினசரிசீட்டு போன்றவற்றை நடத்தி அதிகவட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி உங்களை ஏமாற்ற குற்றப்பின்னணி கொண்ட பலர் ஈடுபட்டு வருகின்றனர். எனவே இதனை நம்பி பொதுமக்கள் ஏமாந்து விடக்கூடாது. மேலும் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டால் அதனை முழுவதும் மீட்க முடியாத சூழல் ஏற்படும். எனவே பொதுமக்கள் அனைவரும் தங்களது கடின உழைப்பின் மூலம் ஈட்டிய பணத்தை முதலீடு செய்யும் போது, அந்த நிறுவனம் இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிறுவனமா? அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் யார்? யார்? சொந்த மாவட்டத்தை சேர்ந்தவர்களா? அல்லது வேறு மாநிலத்தை சேர்ந்தவர்களா? என்பது பற்றி ஆராய்ந்து பணத்திற்கு 100 சதவீதம் உத்தரவாதம் வழங்கப்பட்டால் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். குறிப்பாக அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் முதலீடு செய்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.