மாவட்ட செய்திகள்

ஊத்துக்கோட்டையில் இயல்பு நிலை பாதிப்பு

ஆந்திராவில் நடைபெற்ற முழுஅடைப்பு போராட்டம் காரணமாக ஊத்துக்கோட்டையில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.

ஊத்துக்கோட்டை,

மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி கடந்த வாரம் பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தார். இதில் ஆந்திராவுக்கு போதிய நிதியை ஒதுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

இந்த நிலையில் மத்திய அரசின் இந்த போக்கை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் மாநிலம் தழுவிய முழுஅடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன.

இந்த போராட்டத்துக்கு பவன்கல்யாண் தலைமையிலான ஜனசேனா கட்சி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

அதன்படி நேற்று ஆந்திர மாநிலம் முழுவதும் முழு
அடைப்பு போராட்டம் நடைபெற்றது. சிறுகடைகள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை ஏராளமானவை மூடப்பட்டிருந்தன. அரசு பஸ்கள் ஓடவில்லை.

இந்த முழுஅடைப்பு போராட்டத்தால் தமிழகஆந்திர எல்லையில் உள்ள ஊத்துக்கோட்டையிலும் இயல்புநிலை பாதிக்கப்பட்டது.

முழு அடைப்பு போராட்டம் காரணமாக தமிழகஆந்திர எல்லையில் அமைந்துள்ள சத்தியவேடு மற்றும் நாகலாபுரம் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. அப்பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன.

ஆந்திராவில் உள்ள நரசாரெட்டிகண்டிகை, புதுகுப்பம், ஆம்பாக்கம், பேரடம், மதனம்பேடு, நெல்லிமித்திகண்டிகை பகுதிகளை சேர்ந்த ஆயிரக்
கணக்கானோர் தமிழகத்தில் உள்ள பூண்டி, ஒதப்பை, தாராட்சி, பாலவாக்கம், தேர்வாய்கண்டிகை பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வருகின்றனர்.

முழுஅடைப்பு போராட்டத்தால் ஆந்திர அரசு பஸ்கள் ஓடாததால் இந்த தனியார் நிறுவனங்களில் வேலை செய்யக்கூடியவர்கள் சிரமத்துக்குள்ளாகினர்.

எனவே அவர்கள் வேன்களில் அதிக கட்டணம் செலுத்தி பயணம் செய்தனர். பலர் மினி டெம்போக்களில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர்.

SCROLL FOR NEXT