மாவட்ட செய்திகள்

வேல்முருகன் கைது செய்யப்பட்டதால் தீக்குளிப்பு: இறந்த தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகியின் உடலுக்கு வைகோ அஞ்சலி

வேல்முருகன் கைது செய்யப்பட்டதால் தீக்குளித்து இறந்த தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகியின் உடலுக்கு வைகோ நேரில் அஞ்சலி செலுத்தினார்.

பரங்கிப்பேட்டை,

பரங்கிப்பேட்டை பெரியாண்டிக்குழியை சேர்ந்தவர் குணசேகர் மகன் ஜெகன்சிங்(வயது 31). தமிழக வாழ்வுரிமை கட்சியின் பரங்கிப்பேட்டை ஒன்றிய இளைஞரணி செயலாளராக இருந்து வந்தார்.

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதை அறிந்த ஜெகன்சிங் மனவேதனை அடைந்தார்.இந்த நிலையில் அவர், தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்தார். இதில் தீக்காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெகன்சிங் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து பெரியாண்டிக்குழியில் உள்ள அவரது வீட்டில் ஜெகன்சிங் உடல் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று அதிகாலை 3 மணிக்கு பெரியாண்டிக்குழி கிராமத்திற்கு வந்தார். பின்னர் இறந்த ஜெகன்சிங் உடலுக்கு அவர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் குணசேகரன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் முடிவண்ணன், ஒன்றிய செயலாளர் கோபு மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.