பென்னாகரம்,
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் ஆகிய அணைகள் நிரம்பி வருகின்றன. இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நீர்வரத்து படிப்படியாக குறையத்தொடங்கியது. நேற்று முன்தினம் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்தது.
இந்த நிலையில் நேற்று காலை வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்து மாலை 5 மணி நிலவரப்படி வினாடிக்கு 7,100 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த அளவே தண்ணீர் கொட்டியது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அவ்வப்போது அளந்து கண்காணித்து வருகின்றனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் நேற்று முன்தினம் ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. ஆனால் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. இதனிடையே காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் நேற்று கர்நாடக மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வந்தனர்.
அவர்கள், மெயின் அருவி, சினிபால்ஸ் மற்றும் காவிரி கரையோரம் குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்ததால் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். காவிரி கரையோரம் பாதுகாப்பாக குளிக்குமாறு போலீசார் அறிவுறுத்தினர். மாவட்ட நிர்வாகம் பரிசல் இயக்க விதித்த தடையை நீக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் மற்றும் பரிசல் ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.