மாவட்ட செய்திகள்

காஷ்மீரில் பணியாற்றிய தென்காசி ராணுவ வீரர் கதி என்ன? கலெக்டரிடம் தாயார் கதறல்

காஷ்மீரில் பணியாற்றிய தென்காசி ராணுவ வீரரின் கதி என்ன? என்பதை அறியாததால், மாவட்ட கலெக்டரிடம் தாயார் கதறி அழுதார்.

தினத்தந்தி

பனவடலிசத்திரம்,

தென்காசி மாவட்டம் பனவடலிசத்திரம் அருகே ஆயாள்பட்டி மேலதெருவைச் சேர்ந்தவர் துரை பாண்டியன். இவருடைய மனைவி அழகாத்தாள். இவர்களுடைய மகன் முல்லைராஜ் (வயது 29). இவர் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம் நவ்காம் பகுதியில் ராணுவ வீரராக கடந்த 9 ஆண்டுகளாக பணியாற்றினார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் அழகத்தாளின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசிய நபர், ஜம்மு காஷ்மீரில் முல்லைராஜிடன் ராணுவ வீரராக பணியாற்றுவதாகவும், முல்லைராஜ் திடீரென்று இறந்து விட்டதாகவும் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அழகத்தாள் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர்.

பின்னர் இந்த தகவலை உறுதிப்படுத்துவதற்காக மீண்டும் அதே செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது அந்த நபர் செல்போனை எடுத்து பேசவில்லை. மேலும் அங்குள்ள ராணுவ அதிகாரிகளிடம் இருந்தும் எந்த பதிலும் கிடைக்கப் பெறவில்லை.

கதி என்ன?

இதையடுத்து முல்லைராஜின் கதி என்ன? என்பதை அறிய முடியாததால், அவரது பெற்றோர் துரைபாண்டியன்-அழகத்தாள் மற்றும் குடும்பத்தினர் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மனு வழங்கினர். பின்னர் அவர்கள் நேற்று சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமுக்கு சென்று, கலெக்டர் அருண் சுந்தர் தயாளனிடம் முறையிட்டனர்.

அப்போது கலெக்டரின் காலில் விழுந்து அழகாத்தாள் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவர்களுக்கு ஆறுதல் கூறிய கலெக்டர் அருண் சுந்தர் தயாளன், இதுகுறித்து மத்திய ராணுவ அமைச்சகத்தை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார். பின்னர் முல்லைராஜின் குடும்பத்தினர் அங்கிருந்து திரும்பி வந்தனர்.

சோகத்தில் மூழ்கிய கிராமம்

பின்னர் அவர்கள், இதுதொடர்பாக ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமியிடமும் மனு வழங்கினர். தொடர்ந்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கும் மனு அனுப்பினர்.

காஷ்மீரில் பணியாற்றிய ராணுவ வீரரின் கதி என்ன? என்பது தெரியாததால், அவரது குடும்பத்தினர் மற்றும் கிராமமே சோகத்தில் மூழ்கியது.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்