மாவட்ட செய்திகள்

காட்டு யானைகள் முகாம் தோட்ட தொழிலாளர்கள் பீதி

சேரம்பாடி, அய்யங்கொல்லியில் காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளதால் தோட்ட தொழிலாளர்கள் பீதி அடைந்து உள்ளனர்.

பந்தலூர்,

பந்தலூர் தாலுகா அய்யங்கொல்லி, தட்டாம்பாறை, மழவன்சேரம்பாடி, முருக்கம்பாடி, கொளப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு அய்யங்கொல்லி மூலக்கடை பகுதியில் 4 காட்டு யானைகளும், தட்டாம்பாறையில் குட்டிகளுடன் கூடிய 8 யானைகளும் முகாமிட்டன.

இதுகுறித்து தகவல் அறிந்த பிதிர்காடு வனச்சரகர் மனோகரன், வனக்காவலர் தம்புக்குமார் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்றனர். பின்னர் பட்டாசு வெடித்து காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

இதேபோல் நேற்று மாலை 3 மணிக்கு சேரம்பாடி அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண்.4 பகுதியில் உள்ள காபி தோட்டம் பகுதியில் 10 காட்டு யானைகள் நுழைந்தன. இதனால் தோட்ட தொழிலாளர்கள் பீதி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சேரம்பாடி வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

இதனால் காபி தோட்டத்தை விட்டு காட்டு யானைகள் வெளியேறி அருகே உள்ள வனத்துக்குள் சென்றன.

SCROLL FOR NEXT